Monday, January 19, 2009

சிலம்பொலி

சிலம்பொலியாரின் 'சிலம்பொலி"என்னும் ஆய்வுநூலுக்குக்
கலைஞர் வழங்கிய அணிந்துரை:
நண்பர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் எழுதிய 'சிலம்பொலி'என்னும் நூலைப் படித்துப் பார்த்தேன்.இந்நூலின் தொடக்கமே தொன்மையன் தமிழ் நாடக இலக்கணத்தை நாட்டு மக்களுக்கு நினைவூட்டும் தன்மையில் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது.மங்கல நிகழ்ச்சி நடைபெறும்போது மற்றவைகளைக்-குறிப்பாக-
எதிர்மறையானவைகளை-ஏசல்களைப்-பேசாமல் இருத்தல் நல்லது.எச்செயலைச் செய்கின்றபோதும் நல்லாட்சி செய்யும் நாடாள்பவரை எண்ணி வாழ்த்துவது பழந்தமிழர் பண்பாடு என்பதனை நண்பர் செல்லப்பன் நல்ல முறையில் எடுத்துக்காட்டியுள்ளார்.இன்று தேவையான இக்கருத்துகள் தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த உதவும் என்று நம்புகிறேன்.
இமயம்,பொதியம்,புகார் இவை மூன்றும் அழியாது எனச்சொல்லிய இளங்கோவடிகளின் வாக்குப் பொய்க்காது என்பதை வலியுறுத்த எண்ணிய ஆசிரியர்,அந்த எண்ணத்திற்கு எடுத்துக்காட்டாகத் தமிழக அரசு புதுப்பித்துள்ள பூம்புகாரைச் சுட்டிக்காட்டுகிறார்.
என்றோ பாடிய தமிழ்க் கவிஞனின் வாக்குக்கு இன்றைய தமிழக அரசின் சாதனையைச் சாட்சியாகக் காட்டுவது தமிழர்களுக்கெல்லாம் இன உணர்வைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.இது மட்டுமா?தமிழரின் அன்றைய அணிகலன்கள்,ஆடையின் தன்மை,அங்காடிகள், நகரமைப்பு, மன்றங்களின் தன்மை,கோயில்கள்,கொற்றவைக்கு அக்காலத்தில் செய்த ஒப்பனை,தமிழர் பண்பாடு-இப்படிப் பற்பல பண்டைத்தமிழகத்தின் செய்திகளை ஆசிரியர் அழகுறத் தீட்டியுள்ளார் இந்நூலில்!
தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று சிலப்பதிகாரத்தின் மாண்பினையும் செந்தமிழின்
மேன்மையினையும் திறம்படப் பல மேடைகளில் முழங்கிவரும்-சீரிய செயல் புரியும் இவர்,இளங்கோவடிகளின் செந்தமிழ்க்காப்பியத்துள் மூழ்கித்திளைத்து,
முத்துக்குளித்து,நல்ல சிப்பிகளை மேலே கொணர்ந்து,அரிய பல நன்முத்துகளைத் தேர்ந்து,திகட்டாத இனிய கருத்தோவியமாக இந்நூலைப் படைத்துள்ளார்.
செந்தமிழர் நலம் பாடும் பைந்தமிழ்க் கருவூலமாம் சிலப்பதிகரத்தை எந்தக்கோணத்தினின்று ஆராய்ந்தாலும்,நம் சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்க்கவைக்கும்.தமிழரின் முறையான வரலாற்றுச் செல்வமாய் மூவேந்தராண்ட முப்பெரும் நாடுகளின் வளங்காட்டும் செழும்படைப்பாய்,வாழ்வுநெறிகளை வரையறுத்து உரைத்திடும் நீதிவிளக்காய்
சுற்றுலாப் பெருமை நவின்றிடும் சுவை குன்றாச் சுவடியாய்,மொழிச் சிறப்பும் இனநலனும் மேம்படுத்தும் தீஞ்சுவை அமௌதமாய் இலங்கிடும் சிலப்பதிகாரத்தில் நானும் தோய்ந்து மனத்தைப் பறிகொடுத்தவனாதலால் இதனை நன்கு சுவைத்திட முடிகிறது.
புதையுண்ட பூம்புகாருக்குப் புத்துயிரூட்டி வரும் உணர்ச்சி பொங்கிப் பூரித்துப்
புதுப் பிரவாகமாய் ஓங்கிவரும் இந்த எழுச்சிக் காலத்தில்,ஏற்றதொரு நூலினைப் படைத்தளிக்கும் இனிய நண்பர் செல்லப்பனைப் பாராட்டி அவர்தம் முயற்சிகள் வெல்க என வாழ்த்துகிறேன்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in